|
உழவர்கள், களை என எடுத்த தாமரை மலர்களிலிருந்து பெருகிய தேனானது குளத்தை நிறைக்க உள்ளதும், ஒப்பற்ற செங்கோல் சிறப்பால் எண் திசையிலும் தம் வெற்றித் தூண்களை நாட்டி அரசு செய்யும் சோழ மன்னரின் காவிரியாறு பாயும் நாட்டில் உள்ளதும் வரிஞ்சையூர் என்பதாகும். *** வரிஞ்சையூர் - தஞ்சை மாவட்டத்தில் கீழ்வேளூர் என்னும் ஊருக்குத் தெற்கில் ஏறத்தாழ 7 கிமீ. தொலைவில் உள்ளது. இவ்வூர்த் திருக்கோயிலில் இந்நாயனாரின், திருவுருவம் எழுந்தருளு விக்கப் பெற்று வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. | |
|
இவ்வரிஞ்சையூரில் வாய்மைப் பண்பையுடைய வேளாளர் குலமானது பெருஞ்சிறப்படையது; அக்குலத்துள் வந்து தோன்றியவரும், நான்முகன் முதலான தேவர்களும் நினைத்தற்கரிய சிலம்பை அணிந்த சிவபெருமானின் திருவடிக்கு ஆட்செய்பவரு மான ஒருவர் வாழ்ந்து வந்தார். குறிப்புரை: | |
|
அவர் தலைவரான சிவபெருமானின் அடியவரை இவ்வுலகத்தில் இகழ்ந்து பேசுபவரின் நாவை வலிந்து அரியும் ஆற்றலால் 'சத்தியார்' எனும் பெயரை உடையவர். குறிப்புரை: | |
|
சிவனடியாரைத் தீங்கு கூறி இகழ்ந்த நன்மை இல்லாரின் நாவைத் துண்டித்தற்கு ஏற்ப, வளைந்த 'தண்டாயம்' என்ற கருவிகொண்டு இழுத்து, அவ்விடத்தேயே கூர்மையான கத்தியால் அரிந்து, அன்பு பெருகும் சிறப்புடைய தொண்டில் உயர்ந்து விளங்கினார். *** தண்டாயம் - பற்றி இழுக்கும் குறடு போன்றதொரு கருவி. வலித்து - இழுத்து. ஆயில் - கூர்மை. | |
|
அத்தகைய ஆண்மையுடைய திருத்தொண்டில் நிலைபெற்ற வலிமையுடன் பல ஆண்டுகள் அன்புடன் செய்து வந்தவர், திருச்சடையில் கங்கை யாற்றைச் சூடிய இறைவரின் செம்மை நெறித்தொண்டினைத் தொடர்ந்தும் செய்து வந்தவராவார். குறிப்புரை: | |
|
ஐயம் இல்லாமல் அரியதான இத்திருப்பணியை மெய்ம்மையாகச் செய்து வந்த வீரத்தன்மையுடைய தொண்டரான சத்தியார், உலகு உய்ய அழகிய அம்பலத்தில் ஆடுபவரின் செம்மை தரும் திருவடிநிழலைச் சேர்ந்தார். *** ஐயம் - இச்செயல் செயத்தகுமோ எனும் ஐயம். இறை வனை இகழ்தலினும், அடியாரை இகழ்தல் பெருங்குற்றமாதலின் அச்செயல் செய்வாரின் நாவை அரிதல் கொடிதன்று என்ற துணிவும் உறைப்பும் உடையவர். | |
|
சிவபெருமானின் தொண்டர்களைப் போற்றாதார் வீழ, அவர்களின் நாவை அரியும் சத்தி நாயனாரின் திருவடிகளை வணங்கிச் சிவநெறியான மாதவத்தை யுடைய ஐயடிகள் என்னும் தூய 'காடவரின்' அடிமைத் திறத்தைச் சொல்வாம். *** சாய - வீழ இனி அச்செயலைச் செய்யாது ஒழிய. சத்தி நாயனார் புராணம் முற்றிற்று. | |